
“பாலாக இருந்தால் பொங்கும் பச்சை தண்ணீர் எப்படி பொங்கும்” என்ற வடிவேலுவின் நகைச்சுவை உரையாடலை கேட்டுள்ளீர்களா? என்றாவது இந்த கேள்வி உங்களுக்குள் எழுந்து உள்ளதா பால் ஏன் பொங்குகிறது என்று? தெரிந்து கொள்வோம் இன்று.
தண்ணீர் ஒரு எளிய திரவம். அதில் வேறு எந்த வித தாது பொருட்களும் இல்லை. ஆனால் தண்ணீரைப் போல் பால் என்பது ஓர் எளிய திரவம் கிடையாது. பாலில் நீர், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், தாதுப் பொருள்கள் போன்ற பல உள்ளன. பாலைக் கொதிக்க வைக்கும்போது தனது கொதிநிலையை அடையும் நீர், கொதித்து நீராவியாக மாறுகிறது. அதேநேரத்தில் கொழுப்பு, புரதம் போன்றவை தனியாகப் பிரிந்து பாலின் மேல்புறத்தில் ஆடையாகப் படர்கின்றன.
அந்த நேரத்தில் நீராவி மேல் நோக்கி ஆவியாகச் செல்கிறது. ஆனால், அந்த நீராவியை மேலே செல்லவிடாமல் பாலில் படர்ந்துள்ள பாலாடை தடுக்கிறது. அப்போது அந்த ஆடையைத் தள்ளிக்கொண்டு நீராவி மேலெழும்பி வரும். இதைத்தான் பால் பொங்குகிறது என்கிறோம்.
அது சரி, பின் ஏன்அடுப்பின் வெப்பத்தைக் குறைத்தாலோ இல்லை பாலை கரண்டியால் கலக்கினாலோ பால் பொங்குவது நிற்கிறது ? தெரிந்து கொள்வோம் கீழே.
அடுப்பின் வெப்பத்தைக் குறைத்தால், பாலில் உள்ள நீருக்குக் கிடைக்கும் வெப்பத்தின் அளவு குறையும். இதனால் பாலில் உள்ள நீர் கொதிநிலையை எட்டும் வேகமும் குறையும்.
அதேபோல் பாலைக் கரண்டியால் கலக்கும்போது பாலின் மேலே படர்ந்திருக்கும் பாலாடை உடைக்கப்பட்டு, நீராவி மேலே செல்வதற்கான தடை நீக்கப்படும். தடையின்றி நீராவி மேலே செல்வதால் பால் பொங்குவதும் நின்றுவிடுகிறது.